Wednesday, December 15, 2010

புத்தம் புதுசா, சுத்தமா, குளிர்ச்சியா..

கட்டாயம் அனைவரும் போக வேண்டிய, பார்க்க வேண்டிய இடம்.அந்த இடத்தின் உள்ளே இருந்தாலே வெளியுலகம் மறந்து போகுது.இது வரை நான்கு தளங்களில் மக்களை அனுமதிக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மற்ற தளங்களிலும் மக்கள் அனுமதிக்கப் படுவார்கள்.கலைஞர் செய்த மிக அருமையான பணி இது.

இனி சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் பற்றி.

அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஆகஸ்டு 16, 2008.

தொடங்கப்பட்ட நாள்: 15, செப்டம்பர், 2010.

திறந்து வைத்தவர்: முதல்வர் திரு.கருணாநிதி.

நூலகம் இருக்கும் இடம்: காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்.

மொத்த செலவு: 172 கோடி.

மொத்த ஏரியா: 8 ஏக்கர்.

மொத்த பணியாளர்கள்: 200 நபர்கள்.

 1250 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க முடியும்.

நுழைவு பகுதி: ஐந்து அடி உயரத்தில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்து இருக்கும் அறிஞர் அண்ணாவின் வெண்கல சிலை.

மொத்த தளங்கள்: 9, தரைத் தளத்தினையும் சேர்த்து.

தரைத்தளம்: ரிசப்சன் பகுதி, ப்ரெய்லி முறையில் படிப்பவர்களுக்கான புத்தகங்கள், இரண்டு கான்ப்ரென்ஸ் ஹால்கள்.

முதல் தளம்:குழந்தைகளுக்கான புத்தகங்களும்,நியூஸ்பேப்பர்கள், வார, மாத பத்திரிக்கைகளுக்கான இடமும், அனைத்து மொழி பத்திரிக்கைகளும் இருக்கின்றன.பெரிய ஹாலும்

இரண்டாவது தளம்: முழுவதும் தமிழ் புத்தகங்கள்.140 நபர்கள் அமரக்கூடிய புத்தக வெளீயீட்டு விழா நடத்த ஒரு ஹால்.

மூன்றாவது தளம்:  சமூகவியல், தத்துவம், உளவியல் புத்தகங்கள்.

நான்காவது தளம்: கம்யூட்டர் சயின்ஸ், மருத்துவம், இஞ்சினியரிங் புத்தகங்கள்.

எட்டாவது தளம்: எங்களை போன்றவர்கள் நூலகத்திற்கு கொடுத்த புத்தகங்களை வைக்கப் போகிறார்கள். நாங்கள் 80 ஆங்கிலப் புத்தகங்கள் கொடுத்தோம். என் மகன் காலேஜில் மார்ச் மாதம் கொடுத்து வந்தான்.எங்கள் பெயர் போட்டு தனி செல்ஃபில் வைப்பார்களா??

முக்கியமான செய்தி:ஃபுட் கோர்ட் திறக்கப் போகிறார்கள்.படிக்கும் போது தான் ரொம்ப பசிக்குது.

நூலகம் திறந்து இருக்கும் நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை.

புத்தகங்களின் எண்ணிக்கை: 12 லட்சம்.

கலைஞர் கொடுத்த புத்தகங்கள்:1000 புத்தகங்கள். இரண்டாவது தளத்தில் தனியாக ஒரு அடுக்கில் கலைஞர் பெயர் போட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
அனைத்தும் புத்தம் புதுசாய் இருக்கின்றன.

இன்னும் முடிக்கப்படாதவை:

1200 சீட் கொண்ட பெரிய ஆடிட்டோரியமும், மொட்டைமாடியில் 800 பேர் தரையில் அமரக்கூடிய திறந்த வெளி அரங்கு(amphitheatre), 1000 கார்களும், அதற்கு மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களும் நிறுத்தக் கூடிய பார்க்கிங் ஏரியா.

இது வரை கலைஞர் தவிர யாரும் உறுப்பினராக சேரவில்லை. உறுப்பினர் சேர்க்கை பற்றியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.என்னை இரண்டாவது உறுப்பினராக சேர்த்துக் கொள்ள சொன்னேன்.
இன்னும் கணனிமயமாகவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

 நூலகத்தினை ஒட்டி 180 நபர்கள் அமரக்கூடிய உணவகம் திறக்கப்பட உள்ளது. அதன் மேல் தளத்தில் ஆய்வாளர்கள் தங்கி இருக்க அறைகள் கட்டப்படுகின்றன.

ஒவ்வொரு தளத்திலும் இண்டர்நெட் வசதி செய்யப்படுகின்றன.

அனைத்து புத்தகங்களிலும் RFID (radio frequency identification device)  என்னும் மைக்ரோ சாதனம் பொருத்தப்படும்.திருட்டுதனமாய் யாரேனும் புத்தகத்தை வெளியே எடுத்து செல்ல முயன்றால் அந்த சாதனம் காட்டிக் கொடுக்கும்.

493 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப் படுகின்றன. இரவில் யாரும் கட்டிடத்திற்குள் நுழைந்தாலும் இருட்டில் படம் பிடித்து விடும்.


ஓலைச்சுவடிகள் முதல் E-புக்ஸ் வரை அனைத்தும் உள்ளன.


டிஜிட்டல் நூலகம் யுனெஸ்கோவின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

நிறைகள்:

1.குழந்தைகளுக்கான பகுதியில் சுவரில் கார்ட்டூன் சித்திரங்களும், ஹாலின் நடுவில் ஒரு செயற்கை மரமும் அசத்தலாய் இருக்கிறது. கம்யூட்டரும், ஹெட்ஃபோனும், 1000 புத்தம் புதிய, சி.டிக்களும் இருந்தன.அருமையான இருக்கைகள் சிறுவர்களுக்கு, ஒரு விளையாட்டு கூடமும் உள்ளது.

2.மற்ற தளங்களில் உட்கார போடப்பட்டுள்ள சோபாக்கள் தரமானவைகளாய் உள்ளது. எழுதுவதற்காக போடப்பட்டுள்ள டேபிளும், அமரும் சேர்களும் வசதியாக உள்ளன.

3.லிப்ட்டும், அதனை இயக்க உதவியாளர்களும் உள்ளனர்.

4.அனைத்தும் புத்தம் புது வாசனையான புத்தகங்கள்.

5.ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகள் இருக்கின்றன.

6.கண்ணாடி சுவர்கள், ஜன்னல்கள்,எனவே படிக்கும் இடங்கள் நல்ல வெளிச்சமாய் இருக்கிறது. வெளியில் வேடிக்கைப் பார்க்கவும் முடிகிறது.

7.முழுவதும் குளிர்சாதன வசதி.

8.குழந்தைகளுக்கு உயரம் குறைவான சேர்களும், டேபிள்களும்.

குறைகள்:

பஸ் போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதியில் நூலகம் உள்ளது.

டாய்லெட்டுகளில் தரை எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. தரை சமமாய் போடவில்லையா அல்லது உபயோகிப்போரின் செயலா தெரியவில்லை.பொது இடங்களில் சுத்தமற்ற கழிப்பறைகள் தான் நம் தலையெழுத்து போல.கூட்டம் அதிகம் இல்லாத போதே இந்த நிலைமை. இப்போதைக்கு இது இரண்டும் தான் குறை.

பஸ்/ட்ரையின்: 21G,5C,47C, MRTS கோட்டூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி
ஆட்டோவில் போகலாம்.இனிமேல் அதிக பஸ்கள் அரசு இயக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்த ரூட்டில் பஸ்கள் அனைத்தும் கூட்டமாக தான் செல்கின்றன.

பெண்களுக்கான அட்வைஸ்: ரிசப்ஷனில் பெண்களின் கைப்பைகளை டோக்கன் போட்டு வாங்கி வைத்துக் கொள்ளகின்றனர். எனவே. ஒரு பர்சும் கொண்டு சென்றால், அதில் பணம், பேனா, மூக்குக் கண்ணாடி, செல் ஃபோன், டோக்கன்,சீப்பு! ஆகியவற்றை வைத்து உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள்.

வெளிநாட்டில், வெளி ஊரில் இருக்கும் தமிழர்களுக்கான அட்வைஸ்: அடுத்து சென்னை வரும்போது கட்டாயம் விசிட் செய்யுங்கள்.நேரம் இல்லை என்று எல்லாம் சொல்ல கூடாது. ரங்கநாதன் தெருவிற்கு அடுத்த முறை செல்லலாம்.


                                         சிறுவர் பகுதி

முகப்புத்தோற்றம்






7 comments:

Chitra said...

தகவல் தொகுப்பு, அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நூலகம் அருமையா இருக்கு. நூலகம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

Vidhya Chandrasekaran said...

நான் மூனு மாசத்துக்கு முந்தி போனேன். மெம்பர்ஷிப் ஆரம்பிச்சாச்சா?

வெங்கட் நாகராஜ் said...

மக்களின் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்ட இந்த நாட்களில் இது போன்ற நல்லதொரு நூலகத்தின் அவசியம் அதிகமாய் விட்டது. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

போகணும்கிற ஆவலைத் தூண்டிவிட்டுட்டீங்க. ஆனா, முழுசா ஒருநாள் இருந்தாத்தான் நிதானமா ரசிச்சு அனுபவிக்க முடியும் இல்லியா?

ஆமினா said...

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அமுதா

Thamira said...

நானும் என்னடா ரொம்ப நாளா ஒரு விசயத்தை மறந்துட்டமே மறந்துட்டமேனு நினைச்சுகிட்டிருந்தேன். ஆங்.. இதுதான் அது. இந்த வாரயிறுதி அங்கேதான்.